வேலைவாய்ப்பு பதிவு: கண்டுகொள்ளாத தனியார் பள்ளிகள்
வேலைவாய்ப்பு பதிவு: கண்டுகொள்ளாத தனியார் பள்ளிகள்
UPDATED : ஜூலை 26, 2009 12:00 AM
ADDED : ஜூலை 26, 2009 03:40 PM
பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் வகையில், பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளும் புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் தனியார் பள்ளிகள் அக்கறை காட்டாததால், மாணவர்களும், பெற்றோரும் வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வழக்கம் போல் அலைந்துகொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 30 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் <உள்ளன. இதில் பட்டதாரிகள், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ., படித்தவர்கள், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் என, 55 லட்சம் பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களின் பெயர்களை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் இருந்து அந்தந்த பள்ளிகளுக்கே விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. அந்த விண்ணப்பங்களை மாணவர்களிடம் கொடுத்து ஆசிரியர்கள் பூர்த்தி செய்தாலே போதும்.
பின்னர் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள், பள்ளிகளுக்குச் சென்று, மாணவர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து, தங்களது பதிவேட்டில் பதிவு செய்துகொள்வர். உடனுக்குடனே மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவு அட் டையை அந்தந்த பள்ளிகளிலேயே கொடுத்துவிடுவர்.
இந்த புதிய முறையால் பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பெரிய அள வில் அலைச்சல் மிச்சமானது. இந்தத் திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், இதற்கு சில தனியார் பள்ளிகள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பெயர்ப் பதிவு படிவத்தை மாணவர்களிடம் கொடுத்து, நேரடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கே சென்று பதிவு செய்துகொள்ளுமாறு சில தனியார் பள்ளிகள் கூறிவிட்டன.
இதனால், தனியார் பள்ளி மாணவர்களும், பெற்றோரும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாவது மற்றும் பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களில் எட்டு லட்சம் பேர் தங்களது பெயரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர். இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 63 லட்சமாக உயர்ந்துள்ளது.
ஆட்கள் பற்றாக்குறை: தமிழகம் முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 470 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த ஆண்டு, மேலும் 47 பேர் ஓய்வு பெறுகின்றனர். இதனால், தற்போது மாணவர்களின் பெயர் பதிவை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணிகளில் தொய்வு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
