UPDATED : ஜூலை 28, 2009 12:00 AM
ADDED : ஜூலை 28, 2009 02:37 PM
சென்னை: பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில், இந்திய அரசியல் சாசனப் பகுதிகளை சேர்க்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கழகம் கோரிக்கை வைத்திருக்கிறது.
காந்தியின் தனிச் செயலர் கல்யாணம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரம், தேர்தல் கமிஷன் முன்னாள் கமிஷனர் கோபால்சாமி உட்பட பலர் கையெழுத்திட்ட மனுவும் முதல்வர் கருணாநிதிக்கு இது சம்பந்தமாக அனுப்பப்பட்டிருக்கிறது.
சாதாரண மக்களுக்கும், அரசு இயந்திரத்தை நடத்தும் உயர் அதிகாரிகளுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் அரசியல் சாசனம் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்று கூறும் இந்த அமைப்பினர், முன்பு பள்ளிகளில் மாதிரி மந்திரிசபை இருந்ததைப் போல மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு கழகம் தெரிவித்த கருத்துக்கள்:
நம் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. நாம் பின்பற்றி வரும் மதச்சார்பற்ற கொள்கை தனிச்சிறப்பு வாய்ந்தது. ஆகவே இதை வலியுறுத்தும் அரசியல் சாசனம் குறித்து, எல்லாருக்கும் தெரிந்தாக வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கடமைகள், தேர்தல் அதிகாரங்கள், அரசுப்பணிகள், சட்டம் இயற்றும் முறை, மாநில அரசின் அனைத்து நடைமுறைகள், மத்திய மாநில நிர்வாக உறவுகள், என்று பல்வேறு விஷயங்கள் தெரிந்து கொண்டால் தான் அந்த சிறப்பம்சங்களின்படி வாழ முடியும்.
அரசியல் சாசனத்தை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதைப் பாடத்திட்டத்தில் சொல்லித் தர வேண்டும். ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்துத் தகவல்களையும் சிறிது சிறிதாக சேர்த்தால், நல்லது. அரசியல் சாசனத்தில் இருந்து ஏற்பட்ட சட்டங்கள், அதன் நுணுக்கங்களை சட்டக்கல்லூரியில் மாணவ, மாணவியர் பயிலட்டும்.
இதற்கு வசதியாக கல்வித்திட்டத்தில் நடைமுறை கொண்டுவருவதுடன், முன்பு போல மாதிரி மந்திரிசபை நடைமுறைகளும் பள்ளிகளில் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
