UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 10:17 AM
தமிழகத்தில் ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., சட்டப்படிப்பில், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 241 இடங்கள், மதுரை சட்டக் கல்லூரியில் 171 மற்றும் திருச்சி, கோவை, திருநெல்வேலி, செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரிகளில் தலா 160 இடங்கள் என மொத்தம் 1,052 இடங்கள் உள்ளன. இதில், ஓ.சி., பிரிவினருக்கு 31 சதவீதம், எஸ்.சி., அருந்ததியினருக்கு 3 சதவீதம், எஸ்.சி., 15 சதவீதம், எஸ்.டி., 1 சதவீதம், பி.சி., முஸ்லிம் 3.5 சதவீதம், பி.சி., 26.5 சதவீதம், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினருக்கு 20 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இப்படிப்பிற்கு 2,281 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 269 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 2,012 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. எஸ்.டி., பிரிவில் எட்டு பேர், எஸ்.சி., அருந்ததியர் பிரிவில் 77 பேர், எஸ்.சி., பிரிவில் 920 பேர், பி.சி., முஸ்லிம் பிரிவில் 53 பேர், பி.சி., பிரிவில் 526 பேர், எம்.பி.சி., - டி.என்.சி., பிரிவில் 362 பேர், முற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் 66 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஐந்தாண்டு பி.ஏ., பி.எல்., படிப்பிற்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் துவங்கியது. தரவரிசைப் பட்டியலில், மதுரையைச் சேர்ந்த செல்லதுரை என்ற ஆதிதிராவிடர் மாணவர் 97.62 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தார். இவர், மதுரை சட்டக் கல்லூரியை தேர்வு செய்தார். முதல் ஏழு மாணவர்களுக்கு துணைவேந்தர் சச்சிதானந்தம், சேர்க்கை ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய துணைவேந்தர், “ஐந்தாண்டு படிக்கும் மாணவர்கள் சட்டப் புத்தகத்தை மட்டும் படிக்காமல், இந்த ஐந்து ஆண்டுகளில் பார்லிமென்ட், தமிழக சட்டசபையில் இயற்றப்படும் புது சட்டங்களையும், சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட்டில் நடைபெறும் வழக்குகள் மற்றும் தீர்ப்புகளையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்,” என்றார்.
சட்டத்துறை செயலர் தீனதயாளன், சட்டக் கல்வி இயக்குனர் ஜெயமணி ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ்.சி., மற்றும் எஸ்.சி., அருந்ததியினர் பிரிவினருக்கு ஆக. 1ம் தேதியும், பி.சி., மற்றும் பி.சி., முஸ்லிம் பிரிவினருக்கு 2ம் தேதியும், எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினருக்கு 3ம் தேதியும் கவுன்சிலிங் நடக்கிறது.
