ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு தடை
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு தடை
UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 11:55 AM
மதுரை: ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கவுன்சிலிங் முடிந்தும் இந்தாண்டிற்கான இடங்கள் நிரம்பாத நிலையில், ஜூலை 31க்கு பின், மாணவர்களை சேர்க்க அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததால், பல நிறுவனங்களில் இந்த ஆண்டு பாதியளவு கூட ‘சீட்’கள் நிரம்பவில்லை. ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் துவங்கியதும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகளிலும் பி.எட்., ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர்கள் சேர விரும்பாததற்கு முக்கிய காரணங்கள்.
தற்போதுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தான் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். அதுவும் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே, அதிக ஆர்வம் ஏற்படவில்லை. ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு கவுன்சிலிங் மூலம் நிரப்பும் பணி, கடந்த 24, 25ம் தேதிகளில் முடிவடைந்தது. இதில் பல நிறுவனங்களில் பாதியளவு கூட அரசு ‘சீட்’கள் நிரம்பவில்லை. அதே நிலை தான் நிர்வாக இடங்களுக்கும் உள்ளது.
இந்நிலையில், ஜூலை 31க்கு பின், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மாணவர்களை சேர்க்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்தும், மாணவர்களை தேடிப் பிடிக்கும் நிலை உள்ளதால் காலிப் பணியிடங்களை என்ன செய்வது என தெரியாமல் தவிக்கின்றனர். கடந்த ஆண்டை போல, மாணவர் சேர்க்கைக்கான காலத்தை இந்த ஆண்டும் நீட்டிக்க வேண்டும், என ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.
ஆசிரியர் பயிற்சியின் போது பிராக்டிகல் வகுப்புக்காக மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்குச் செல்வர். அங்கு ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்களே செல்ல வேண்டும். இப்படி பார்த்தால் 50 மாணவர்கள் படிக்கும் பயிற்சி நிறுவனங்களுக்கு 25 பள்ளிகள் தேவை. பல பள்ளிகளில் பயிற்சி மாணவர்களை அனுமதிக்கவே தயங்கும் நிலையில், ஒரு பள்ளிக்கு இரண்டு மாணவர்களை அனுமதிப்பது பிரச்னையாகவே உள்ளது.
