UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 12:59 PM
சென்னை ஐ.ஐ.டி.,யின் 46வது பட்டமளிப்பு விழா ஜூலை 31ல் நடந்தது. விழாவில், கொலம்பியா பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் ஜெகதீஷ் பகவதிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
மேலும் 162 பேருக்கு பி.எச்டி., உட்பட 1,429 பேருக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்கள் வழங்கப்பட்டன. ஸ்ரீவத்சன் நாராயணன் என்ற மாணவனுக்கு ஜனாதிபதி பரிசு உட்பட, 58 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பட்டமளிப்பு விழா உரையாற்றிய பேராசிரியர் ஜெகதீஷ் பகவதி கூறியதாவது:
நீடித்த வளர்ச்சியின் மூலமாகவே வறுமையை ஒழிக்க முடியும். இத்துடன் நிலச்சீர்திருத்தம், கல்வியறிவு, சுகாதாரம் ஆகிய ஏழைகளுக்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு ஊதியம் ஈட்டும் வகையிலான வேலைகளை ஏற்படுத்த வேண்டும். எதிர்மறையான விளைவுகளை தரும் திட்டங்கள் தான் வளர்ச்சியை பாதிக்கின்றன.
ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு உள்ளது. நீங்கள் கற்ற அறிவை பயன்படுத்தவும், நாட்டிற்கும், நாட்டில் உள்ள ஏழைகளுக்கும் சேவை செய்யவும் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அறிவியலை பயன்படுத்தி புது தொழில்நுட்பத்தை உருவாக்கி, மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதுடன், அதன்மூலம் கிடைக்கும் பணத்தை பயன்படுத்தி ஏழைகளுக்கு நன்மை செய்ய முடியும். இவ்வாறு ஜெகதீஷ் பகவதி கூறினார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் ஆனந்த் பேசுகையில், “நாட்டிலேயே முதல் முறையாக 11.42 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி பூங்காவை, செப்டம்பரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் பூங்காவை திறந்து வைக்கவுள்ளனர்,” என்றார்.
சென்னை ஐ.ஐ.டி., நிர்வாகக்குழு தலைவர் சிதம்பரம் பேசுகையில், “தரம் மற்றும் தனித் தன்மை ஆகிய இரண்டும் தொழில்நுட்பக் கல்வியில் நாம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள். ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெறும் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவது குறித்தும் பரிசீலிக்க வேண்டும்,” என்றார்.
