இந்தியாவில் துவங்கப்படும் 6 ஆயிரம் மாதிரி பள்ளிகள்
இந்தியாவில் துவங்கப்படும் 6 ஆயிரம் மாதிரி பள்ளிகள்
UPDATED : ஆக 01, 2009 12:00 AM
ADDED : ஆக 01, 2009 05:20 PM
நாடெங்கும் 6 ஆயிரம் பிளாக்குகளில் மாதிரிப் பள்ளிகள் விரைவில் துவங்கப்படவுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிறப்பான செயல்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு ஒரு பிளாக்கிற்கு ஒரு பள்ளி என்பதாக இவை துவங்கப்படவுள்ளன. ஏற்கனவே மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் நவம்பர் 2008ல் 2 ஆயிரத்து ஐநூறு மாதிரிப் பள்ளிகள், கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் துவங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11வது 5 ஆண்டுத் திட்டத்தில் இதற்காக 12 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இதற்காக 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளை மாநில அரசுகளே நிறுவிட வேண்டும். இப்பள்ளிகளுக்கான தொடர் மற்றும் இதர செலவுகளின் 25 சதவீதத்தை 11வது 5 ஆண்டு திட்ட காலம் வரை அந்தந்த மாநில அரசுகளே ஏற்க வேண்டும். ஆனால் சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் 10 சதவீதத்தை ஏற்றால் போதும்.
எந்த மொழியில் பாடங்களை நடத்துவது, எந்தக் கல்வித் துறை இயக்ககத்துடன் இணைப்பு பெறுவது போன்றவற்றை மாநில அரசுகளே முடிவு செய்யும் அதிகாரம் தரப்பட்டுள்ளது. இதன் மூலமாக இநதியாவின் மூலை முடுக்குகளிலுள்ள ஒவ்வொரு பிளாக்கும் குறைந்த பட்சம் ஒரு மாதிரிப் பள்ளியைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
