UPDATED : ஆக 04, 2009 12:00 AM
ADDED : ஆக 04, 2009 11:10 AM
கம்பம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு தேசிய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆசிரிய பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (என்.சி.டி.இ) கூறியுள்ளதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கம், 14 வயது வரை கட்டாயக் கல்வி போன்ற மத்திய அரசின் கொள்கைகளால், ஆரம்பக் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டதால் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை கல்வியில் பயன் அதிகரித்துள்ளது.
இதனால், ஆசிரியர்கள் தேவை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிக்க துவங்கியது. ஆசிரியர்களுக்கு அதிக சம்பளத்தை அரசு வழங்குவதால் 70 சதவீதம் பேர், கல்லூரிப் படிப்பை முடித்து, பி.எட்., சேர்கின்றனர். இதனால், புற்றீசல் போல், பி.எட்., கல்வி நிறுவனங்கள் அனுமதி வாங்காமல் செயல்படத் துவங்கின. இவற்றை தடுக்கவும், தேவைப்படும் ஆசிரிய ஆற்றல் தொடர்பாக கணக்கெடுக்கவும், ஆசிரிய கல்வி வளர்ச்சியை ஒழுங்குபடுத்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து, பி.எட்., படிப்பிற்கு அனுமதி வழங்கும் மத்திய அரசின் தேசிய கவுன்சில், தமிழகத்தில் 2010-2011க்கான பி.எட்., வகுப்புக்கள் நடத்த அனுமதி இல்லை என்று கூறியுள்ளது. பி.எட்., மட்டுமல்லாமல் டி.எட்., உடற்பயிற்சி கல்வி தொடர்பான பட்டயம், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு போன்றவற்றிற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டோடு, பி.எட்., படிப்பு தமிழகத்தில் முடிவுக்கு வருகிறது. இந்த தடை உத்தரவு மைனாரிட்டி கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது.
