UPDATED : ஆக 11, 2009 12:00 AM
ADDED : ஆக 11, 2009 02:29 PM
சென்னை: ‘பி.இ., படிப்பில் நான்கு ஆண்டுகள் கற்கும் கல்வியை அடிப்படையாகக் கொண்டு, 20 முதல் 60 வயது வரை உள்ள 40 ஆண்டுகள் பணிபுரிய முடியும்” என, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., - ஏ.சி.டெக்., - எஸ்.ஏ.பி., ஆகிய நான்கு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பி.இ., - பி.டெக்., வகுப்புகள் ஆக. 10ம் தேதி துவங்கின. மாணவர்களுக்கான அறிமுகக் கூட்டத்தில் துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது:
ஜூலை 10ம் தேதி ஆரம்பித்த பொறியியல் கவுன்சிலிங்கிற்கு, ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேரை அழைத்தோம். கவுன்சிலிங்கின் முடிவில் 30 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் எனத் தெரிகிறது; 80 ஆயிரம் பேர் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். இதில் சிறந்த மாணவர்களுக்கு சென்னை அண்ணா பல்கலையில் இடம் கிடைத்துள்ளது. பொறியியல் படிப்பை 20 வயதில் முடித்த பிறகு, 60 வயது வரை வேலை செய்ய வேண்டும். அந்த 40 ஆண்டு வாழ்க்கைக்கு, பி.இ.,யில் நீங்கள் படிக்கும் நான்கு ஆண்டு கல்வி தான் அடிப்படை.
அறிவு, மனப்பான்மை, திறன், பழக்கவழக்கம் ஆகிய நான்கும் மிக முக்கியம். அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையால், நன்கு படிக்கும் மாணவர்களிலும் சிலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. தினசரி எட்டு மணி நேரம் வகுப்பறை, எட்டு மணி நேரம் தூக்கம் போக, மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் படியுங்கள். பிறகு ஆறு மணி நேரம் விருப்பமானதைச் செய்யலாம். முதல் செமஸ்டர் முதல் எல்லா தேர்வுகளிலும் நன்றாகப் படித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.
கல்வியாளர் ரமேஷ் பிரபா பேசுகையில், “கிராமப்புற மாணவர்களின் தாழ்வு மனப்பான்மையையும், நகர்ப்புற மாணவர்களின், எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தையும் மாற்ற வேண்டும். பொறியியலில் ஒரு பிரிவு சிறந்தது, மற்றொரு பிரிவு தாழ்ந்தது என்ற தவறான எண்ணம் களையப்பட வேண்டும். ஆங்கில மொழித் திறன், பொது அறிவு ஆகிய இரண்டையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” என்றார்.
கிண்டி பொறியியல் கல்லூரி டீன் சேகர் வரவேற்றார். ஏ.சி.டெக்., டீன் ராமமூர்த்தி, எஸ்.ஏ.பி., டீன் மான்சிங் டேவிட் தேவதாஸ், ராமானுஜம் கம்ப்யூட்டர் மைய இயக்குனர் ரைமண்ட் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.
