பொறியியல் துணை கவுன்சிலிங்: 603 இடங்கள் ஒதுக்கீடு
பொறியியல் துணை கவுன்சிலிங்: 603 இடங்கள் ஒதுக்கீடு
UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 12:12 PM
பிறகு, நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைப்படி தற்போது துணை கவுன்சிலிங்கில் பங்கேற்று இடத்தை தேர்வு செய்தார்.
பிளஸ் 2 உடனடித் தேர்வெழுதி, பொறியியல் படிப்பில் சேர தகுதி பெற்றவர்களுக்கான பொறியியல் துணை கவுன்சிலிங் நடந்தது. இதில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவில் 112 பேர் உட்பட மொத்தம் 897 பேர் விண்ணப்பித்திருந்தனர். கவுன்சிலிங்கில் பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் 37 பேர் உட்பட 603 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்திருந்தவர்களில், 11 பேர் 180க்கும் அதிகமான ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தனர். சுதா பிரியா என்ற மாணவி, இயற்பியல் 170, வேதியியல் 196, கணிதம் 199 என 191 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்று, முதலிடம் பிடித்திருந்தார். ஆனால், ஆக. 10ம் தேதி நடந்த பொறியியல் துணை கவுன்சிலிங்கில், மாணவி சுதா பிரியா கலந்து கொள்ளவில்லை.
மாணவியின் தந்தை சுந்தரம் கூறுகையில், “முன்பு நடந்த பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு, கோவையைச் சேர்ந்த கல்லூரியை தேர்வு செய்திருந்தோம். ஆனால், சுதா பிரியாவின் தாயார் உடல்நிலை காரணமாக, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர வேண்டியிருந்தது. எனவே, சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளேன்,” என்றார்.
ஈஸ்வரி என்ற மாணவி முதலாவதாக இடம் தேர்வு செய்தார். இவர் இயற்பியலில் 189, வேதியியலில் 168, கணிதத்தில் 199 என 188.75 ‘கட்-ஆப்’ மதிப்பெண் பெற்றிருந்தார். பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1,200க்கு 1,038 மதிப்பெண் பெற்றிருந்தார். இவரது தந்தை ராமன் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
மாணவி ஈஸ்வரி கூறுகையில், “பொறியியல் படிப்பிற்கு அதிகளவில் செலவாகும் என்பதால், கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்கவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள், எனது தந்தையிடம், ‘நல்ல மதிப்பெண் எடுத்திருக்கிறாள். பொறியியல் படிக்க வைத்தால், வாழ்க்கையில் முன்னேற முடியும்’ என தெரிவித்தனர். அதனால் தான், பொறியியல் துணை கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்தேன். எனது படிப்பு செலவிற்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவுவதாக தெரிவித்துள்ளனர்,” என்றார்.
இம்மாணவி, கோவையில் உள்ள ஜே.சி.டி., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜியை தேர்வு செய்துள்ளார். பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உதரியராஜ், மாணவிக்கு சேர்க்கை ஆணையை வழங்கினார். பொறியியல் கவுன்சிலிங்கில் விண்ணப்பித்திருந்தால், இம்மாணவி பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு முன்னணி கல்லூரியிலேயே இடம் கிடைத்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழப்பத்தில் மாணவர்கள்:
நாமக்கல் மாணவர் நவீன், பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் இ.சி.இ., படிப்பை தேர்வு செய்து, சேர்க்கை ஆணையையும் பெற்றார். பின்னர், மருத்துவக் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு கோவை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இடத்தை தேர்வு செய்தார்.
பொறியியல் படிப்பிற்கு மறுகவுன்சிலிங் நடத்தப்படாததால், பொறியியல் சேர்க்கை ஆணையை மருத்துவக் கவுன்சிலிங்கின்போது ஒப்படைக்க வேண்டியதில்லை. எனவே, மாணவர் நவீன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை ஆணையை திரும்ப ஒப்படைத்துள்ளார். ஆனால், நவீன் பொறியியல் படிக்கவே விரும்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பொறியியல் படிக்க அனுமதிக்குமாறு கோரியுள்ளார். எம்.பி.பி.எஸ்., இடத்தை திரும்ப ஒப்படைத்து வந்தால், இடம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவக் கல்வி இயக்குனரக அதிகாரிகளிடம் கோவை மருத்துவக் கல்லூரி எம்.பி.பி.எஸ்., இடத்தை திரும்ப ஒப்படைத்து, அதற்கான கடிதத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்து, முன்பு தேர்வு செய்த இடத்திற்கான சேர்க்கை ஆணையை பெற்றுச் சென்றார்.
