பாரதியார் பல்கலை மாணவியின் ஆய்வு கட்டுரைக்கு சர்வதேச விருது
பாரதியார் பல்கலை மாணவியின் ஆய்வு கட்டுரைக்கு சர்வதேச விருது
UPDATED : ஆக 12, 2009 12:00 AM
ADDED : ஆக 12, 2009 01:33 PM
கோவை: பாரதியார் பல்கலையின் இயற்பியல் துறை மாணவி சீதாவின் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் சிறந்த கட்டுரைக்கான விருது பெற்றுள்ளது.
முன்னேற்றத் துறைகளுக்கு பயன்படும் மெட்டீரியல்கள் குறித்த ஐந்தாவது சர்வதேச மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ‘சன்டெக் சிட்டியில்’ நடந்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலை, நான்யாங் தொழில்நுட்ப பல்கலை, மெட்டீரியல்ஸ் ஆராய்ச்சி மற்றும் இயந்திர அமைப்பு கலை ஸ்தாபனமும் இணைந்து இம்மாநாட்டை நடத்தின.
ஆறு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 23 கருத்தரங்குகள் நடந்தன. மருத்துவம், பவுதீகம், வேதியியல் துறைகளில் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று பேசினர். இம்மாநாட்டில் கோவை பாரதியார் பல்கலையின் இயற்பியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் சுரேஷ்குமார், தயாள் ராஜ், சீதா, பாரதி, ஜோசப் நத்தானியேல் பங்கேற்று தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
இதில் மாணவி சீதாவின் ‘தின் பிலிம்’ குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கு சிறந்த கட்டுரைக்கான விருது வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற ‘ஆக்டிவ் மற்றும் ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ்’ குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்று, சிறந்த கட்டுரைக்கான விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாரதியார் பல்கலையில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) உள்ள ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சிகள் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விருதுகளை பெற்ற மாணவி சீதாவை, பல்கலையின் துணைவேந்தர் திருவாசகம், பதிவாளர் திருமால்வளவன், டி.ஆர்.டி.ஓ. தலைவர் மங்களராஜ் ஆகியோர் பாராட்டினர்.
