UPDATED : செப் 07, 2018 12:00 AM
ADDED : செப் 07, 2018 12:34 PM
சென்னை: தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி துவங்குகிறது.
தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள, பி.டி.எஸ்., படிப்புக்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் முடிந்து உள்ளது. இதில், அரசு ஒதுக்கீட்டில், 264 இடங்களும், நிர்வாக ஒதுக்கீட்டில், 569 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப, இதுவரை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்காதோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, 207 பேர் புதியதாக விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான கவுன்சிலிங், வரும், 10ம் தேதி, சென்னை, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நடைபெற உள்ளது. அரசு ஒதுக்கீட்டிற்கு, காலை, 9:00 மணிக்கும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, பிற்பகல், 2:00 மணிக்கும் கவுன்சிலிங் துவங்கும்.
இதுகுறித்து, மருத்துவ மாணவர் தேர்வு குழு செயலர், செல்வராஜன் கூறியதாவது: பல் மருத்துவ இடங்களுக்கு புதிதாக விண்ணப்பித்தோர்; ஏற்கனவே விண்ணப்பித்து, கவுன்சிலிங்கில் பங்கேற்காதோர்; கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை கைவிட்டோர் என, அனைவரும் பங்கேற்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
