UPDATED : அக் 05, 2009 12:00 AM
ADDED : அக் 05, 2009 12:20 PM
கோவை: உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனத்துக்கான எழுத்துத் தேர்வு கோவையில் நடந்தது; 1,538 பேர் தேர்வு எழுதினர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பதவிகள் இதுவரை பதவி மூப்பின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்புடன் பி.எட்., படித்தவர்கள் இத்தேர்வை எழுதலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் கல்வி மாவட்டங்கள் அடங்கிய கோவை வருவாய் மாவட்டத்தில் இத்தேர்வுக்கு 1,803 விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராஜவீதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒப்பணக்கார வீதி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து மையங்களில் நேற்று நடந்தது.
விண்ணப்பதாரர்கள் பி.எட்., படிப்பில் படித்த முக்கிய பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டது. இதன்படி, தமிழ் 227, ஆங்கிலம் 193, கணிதம் 430, இயற்பியல் 183, வேதியியல் 222, தாவரவியல் 174, விலங்கியல் 187, வரலாறு 142, புவியியல் 45 பேர் என மொத்தம் 1,538 பேர் தேர்வு எழுதினர். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித் துறையினர் செய்திருந்தனர்.
