UPDATED : அக் 07, 2009 12:00 AM
ADDED : அக் 07, 2009 03:30 PM
நுண்ணிழை (பைபர்-ஆப்டிக்ஸ் ) கம்பிவடம் வழியாக ஒளிகடத்தல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட, சார்லஸ் கே.கவோ என்பவருக்கும், செமிகண்டக்டர் சர்க்யூட் எனப்படும், சி.சி.டி., சென்சாரைக் கண்டுபிடித்த வில்லர்டு எஸ். பாய்லே, ஜார்ஜ் இ. ஸ்மித் என்ற இரண்டு விஞ்ஞானிகளுக்கும், நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ராயல் ஸ்வீடிஷ் அகடமி அறிவித்துள்ளது.
இந்த விருது, ஐந்து கோடியே 20 லட்ச ரூபாய் மதிப்புடையது. இதில் பாதித் தொகை கவோவுக்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் மூவரும் கவுரவிக்கப்படுவர்.
‘இன்றைய தகவல் தொடர்புத்துறைக்கு, இம்மூவரின் பணி பெரும் உதவி புரிந்துள்ளது. அன்றாட வாழ்வில் உபயோகப்படும் பல கருவிகளைக் கண்டறிந்து அறிவியலின் பரிணாமத்துக்குத் தொண்டாற்றியுள்ளனர்’ என்று, கமிட்டி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஷாங்காயில் பிறந்த கவோ, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து குடிமகனாவார். பாய்லே கனடா மற்றும் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர். ஸ்மித் அமெரிக்காவைச் சேர்ந்தவர்.
