UPDATED : அக் 14, 2009 12:00 AM
ADDED : அக் 14, 2009 06:25 PM
இதுபோன்ற துறைகளை மூடிவிடலாம் என்ற கருத்தும் ஒருபுறம் உள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை ஆகிய துறை சார்ந்த படிப்புகளிலேயே இன்றைய மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் தேர்வு இவையாகத்தான் இருக்கிறது. கலை பட்டப்படிப்புகள் இரண்டாம்பட்சமாகவே கருதப்படுகிறது.
இந்த நிலைக்கு படித்த முடித்தவுடன் வேலை என்ற கோட்பாட்டிற்குள் பி.ஏ., பி.எஸ்சி., போன்ற பட்டப்படிப்புகள் வராத சமூகநிலையே காரணமாக கூறப்படுகிறது. பொதுவாக இதுபோன்ற படிப்புகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூட கல்லூரிகளில் வளாக நேர்காணல் நடத்த நிறுவனங்கள் வருவதில்லை என்பது மாணவர்களின் குற்றச்சாட்டு. இது ஒருவிதத்தில் உண்மையும் கூட...
மருத்துவம், இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் போன்ற படிப்புகளில் மாணவர்கள், பெற்றோரின் ஆர்வப் பார்வை வீசப்படுவதற்கு படித்துமுடித்தவுடன் வங்கிக்கணக்கில் ஏறும் சம்பளம் தான் முக்கிய காரணமா? அல்லது கலை, அறிவியல் படிப்புகளில் உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தப்படுவதில்லையா?
இதுகுறித்து, சென்னைப் பல்கலைக்கழக பொருளியல் துறைத் தலைவர் ராஜலட்சுமியிடம் கேட்டபோது:
கலை துறை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குறியது. முதுநிலை படிப்புகளில் மொத்தம் உள்ள 20 இடங்களில் 12 பேர் மட்டுமே சேருகின்றனர். கலை பட்டப் படிப்புகளை வழங்கும் பெரும்பாலான கல்லூரிகளிலும் இந்த நிலை காணப்படுகிறது. பொதுவாக, கிராமப்புற மாணவர்களே கலை படிப்புகளில் சேரும் நிலை உள்ளது. ஆனால், வட மாநிலங்களில் மிக ஆர்வத்துடன் இப்படிப்புகளை படிக்கின்றனர். டெல்லி பல்கலையில் 40 இடங்களுக்கு 5 ஆயிரம் விண்ணப்பங்கள் குவிகின்றன.
தென் மாநிலங்களில் கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறைவுக்கு இங்குள்ள பாடத்திட்டம்கூட காரணமாக இருக்கலாம். நவீன மாற்றத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மேம்படுத்தப்படாமல் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புள்ள அதே பாடத்திட்டம் அப்படியே இன்றும் உள்ளது. சிவில் சர்வீஸ், நெட் / செட், போட்டித் தேர்வுகள் ஆகியவற்றிலும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். புதியவற்றை கற்கவும், கற்பிக்கவும் ஆசிரியர்களும் ஆர்வம் காட்ட வேண்டும்.
மற்றபடி பொருளியல், மானுடவியல் போன்ற கலை படிப்புகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாணவர்கள் முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தலாம். ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு நிகரான இந்தியன் எக்னாமிஸ்ட் தேர்வு (ஐ.இ.எஸ்.,) தேர்வை பொருளியல் மாணவர்கள் எழுத முடியும். இதன்மூலம், பிரதமருக்கு ஆலோசகராகக் கூட பொறுப்பேற்க முடியும். நோபல் உள்ளிட்ட பரிசுகளும் இத்துறையை சார்ந்தவர்கள் அதிகளவில் பெறுவதை காணமுடிகிறது. இவ்வாறு பேராசிரியர் ராஜலட்சுமி தெரிவித்தார்.
