UPDATED : அக் 22, 2009 12:00 AM
ADDED : அக் 22, 2009 01:00 PM
கோவை: “ஒரு மாணவன் தனது வாழ்க்கையில் ஐந்து வகையான கல்வியை பெற்றிருக்க வேண்டும். இந்த ஐந்து வகையான கல்வியை மாணவர்களுக்கு அளிப்பவரே சிறந்த ஆசிரியர்,” என்று பேரூர் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் பேசினார்.
இந்துஸ்தான் பி.எட்., கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடந்தது. விழாவில் பேரூர் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் பேசியதாவது:
குழந்தைகளின் முதல் பள்ளி குடும்பம். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய இந்த வரிசையில் குரு மூன்றாவது இடத்தில் வைத்து போற்றப்படுகிறார். எழுத்து அறிவித்தவன் இறைவன். கண்ணால் காண முடியாத அந்த பரம்பொருளே நம் குருவாக இருக்கிறார்.
‘ஆசிரியர்’ என்பதை ‘ஆசு’ என்றும் ‘இயர்’ என்றும் பிரிக்கலாம். ஆசு என்றால் குற்றம். இயர் என்றால் நீக்குதல். குற்றத்தை நீக்கி அறிவு புகட்டுபவர் ஆசிரியர். ஒரு மாணவன் ஐந்து வகையான கல்வியை பெற்றிருக்க வேண்டும். ஏட்டுக்கல்வி, இறைவழிபாடு, அறநெறிக் கல்வி, கலைக்கல்வி, மெஞ்ஞானம் ஆகிய, உள்ளத்தின் இருளை போக்கும் இந்த ஐந்து வகை கல்வியை மாணவனுக்கு அளிப்பவரே சிறந்த ஆசிரியர்.
ஏட்டுக்கல்வி என்பது குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி அளித்தல். இறைவழிபாட்டுக் கல்வி என்பது இறையுணர்வை போதித்தல். அறநெறிக் கல்வி என்பது பெற்றோர்களால் கற்றுத்தரப்படும் நல்ல பழக்க வழக்கங்கள். கலைக் கல்வி என்பது ஆயக்கலை 64 கலைகளில், குழந்தைகளுக்கு விருப்பம் உள்ள கல்வியை கற்றுத் தருவது. மெஞ்ஞானம் என்பது நாம் யார் என்பதை அறிவது. ஒரு வீட்டில் இருள் அகல தீபம் ஏற்றி வைப்போம். அதே போல் மனிதனின் அறியாமை அகல, கல்வி கற்க வேண்டும். இவ்வாறு, மருதாசல அடிகளார் பேசினார்.
கல்லூரி செயலர் சரஸ்வதி, முதல்வர் ராஜம்மாள், உடுமலை ஆர்.கே. கல்வியியல் கல்லூரி செயலாளர் ராமசாமி, இந்துஸ்தான் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கற்பகம் மற்றும் மாணவ மாணவியர் பலர் பங்கேற்றனர்.
