தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் மலர் கண்காட்சி ஏற்பாடுகள் தீவிரம்
UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 06:26 AM
வேளாண் பல்கலை சார்பில், மலர் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இதில் உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும். பல்கலையில் இறுதியாக 2012 ஜன., மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. அதன்பின் இக்கண்காட்சி நடத்தப்படவில்லை. நடப்பாண்டில் மலர் கண்காட்சி நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில்:
மலர் கண்காட்சியில் முழுமையாக தமிழகத்தை சேர்ந்த மலர்களை பிரத்யேகமாக காட்சிப்படுத்துதல், மலர்களை கொண்டு மதிப்புகூட்டல் தொழில் வாய்ப்புகள் சார்ந்த கண்காட்சி மற்றும் மாடித்தோட்டம் சார்ந்த பொருட்கள் கண்காட்சி, விழிப்புணர்வு என பல்வேறு தீம் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்கும். இதுதொடர்பான ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஆக., இறுதி வாரம் அல்லது செப்., முதல் வாரம், கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.
