இன்ஜி., பொது நுழைவு தேர்வில் பெங்களூரு மாணவர் முதலிடம்
இன்ஜி., பொது நுழைவு தேர்வில் பெங்களூரு மாணவர் முதலிடம்
UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 03:16 AM
கர்நாடகாவில் இரண்டாம் ஆண்டு பி.யு.சி., வகுப்புக்கு பின் பொறியியல், பி.எஸ்.சி., விவசாயம், தொழில்நுட்பம், டிப்ளமோ தொழில்நுட்பம் உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு சி.இ.டி., எனும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாணவியரே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொறியியல் படிப்புக்கு மொத்தம் 2.03 லட்சம் பேர் தேர்வாகி உள்ளனர்.தரவரிசை பட்டியல்நடப்பாண்டு மே 21, 22ம் தேதிகளில் 592 மையங்களில் சி.இ.டி., தேர்வு நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 610 பேர் விண்ணப்பித்தனர். இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 345 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இது, 93.16 சதவீதமாகும். இரண்டாம் ஆண்டு பி.யு.சி., மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றது. இந்நிலையில் பெங்களூரில் உள்ள கர்நாடக தேர்வு ஆணையத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் சுதாகர், நேற்று சி.இ.டி., தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.பின் அவர் கூறியதாவது:
இம்முறை சி.இ.டி., தேர்வில் 2 லட்சத்து 3,381 பேர் பொறியியல் படிப்புக்கும், ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 187 பேர் விவசாய அறிவியல் படிப்புக்கும் தேர்வாகி உள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 756 பேர் கால்நடை படிப்புக்கும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 746 பேர் யோகா, நேச்சுரோபதி படிப்புக்கும், 2 லட்சத்து 6,191 பேர் பி.பார்ம் படிப்புக்கும், 2 லட்சத்து 6,340 பேர் டி.பார்ம் படிப்புக்கும், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 808 பேர் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கும் தகுதி பெற்றுள்ளனர்.மாநிலத்தில் முதலிடம்
பொறியியல் பிரிவில், பெங்களூரு மல்லசந்திரா குமரன் சில்ட்ரன்ஸ் ஹோம் கல்லுாரி மாணவர் விக்னேஷ் நடராஜ்குமார் 96.111 சதவீத மதிப்பெண், யோகா நேச்சுரோபதி மற்றும் பி.பார்ம் பிரிவுகளில், பெங்களூரு பத்மநாப நகர் குமரன் சில்ட்ரன்ஸ் ஹோம் பி.யு., கல்லுாரியின் மாணவி பிரதீக்ஷா 97.222 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளனர்.விவசாய அறிவியல் பிரிவில், மங்களூரு எக்ஸ்பர்ட் பி.யு.சி, கல்லுாரி மாணவர் பைரேஸ் 93.75 சதவீத மதிப்பெண், கால்நடை பிரிவு மற்றும் பி.எஸ்.சி., நர்சிங் பிரிவில் பெங்களூரு சாம்ராஜ்பேட் மகேஷ் பி.யு.சி., கல்லுாரி மாணவி மாளவிகா கபூர் 97.22 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.பொதுவாக, அனைத்து பிரிவுகளிலுமே மாணவியரே அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கல்லுாரிகளில் சேருவதற்கான முதல் சுற்று கவுன்சிலிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ஆவணங்கள் சரியாக இருந்தால் மட்டுமே தகுதி பெறுவர்.இவ்வாறு அவர் கூறினார்.பின், http://kea.kar.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன. சாதனை படைத்த மாணவர்களுக்கு, பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
