UPDATED : செப் 06, 2023 12:00 AM
ADDED : செப் 06, 2023 11:04 AM
சென்னை:
நுாலக ஆணை பெறுவதற்காக, எழுத்தாளர்களின் அறிவுசார் சொத்துரிமை இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், நுாலகங்களுக்கு நல்ல புத்தகங்கள் வாங்கப்படுவதில்லை. அதிக கமிஷன் கேட்பதால், நல்ல எழுத்தாளர்கள் தங்கள் புத்தகங்களை நுாலகங்களுக்கு தருவதில்லை என்ற புகார், நுாலக ஆணைக்குழு மீது நீண்டகாலமாக உள்ளது. இந்நிலையில், தமிழக நுாலக வாசகர் இயக்க மாநில அமைப்பாளர் ஆதித்தன் என்பவர் பொது நுாலக ஆணையர் இளம்பகவத்துக்கு அனுப்பி உள்ள புகார்:
தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்ட மணவை முஸ்தபாவின் நுால்களை, வனிதா பதிப்பகத்தை சேர்ந்த மயிலவேலன் என்பவர், தன் பெயரில் வெளியிட்டுள்ளார். அதேபோல், அ.ச.ஞானசம்பந்தன், அவ்வை துரைசாமி, அ.கி.மூர்த்தி உள்ளிட்டோரின் நுால்களும் வெவ்வேறு நுாலாசிரியர்கள், பதிப்பகங்களின் பெயர்களில் அச்சிடப்பட்டு, நுாலகங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அவை, நுாலகங்களில் உள்ளன. இவ்வாறு நுாலக ஆணைக்காக மோசடி செய்துள்ள மயிலவேலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.ஆதாரமற்ற குற்றச்சாட்டு
பபாசி என்ற தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு, அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. அதில், தலைவர் பதவிக்கு நான் போட்டியிட உள்ளேன். அதைத் தெரிந்துகொண்டு, ஏற்கனவே சங்கத்தின் நிதியை முறைகேடாக கைப்பற்றிய சிலர், என் நடத்தையின் மீது சேறு பூசி, பதவியை கைப்பற்ற நினைக்கின்றனர். இது, ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார் வனிதா பதிப்பகம், மயிலவேலன்.
