செனட், சிண்டிகேட் கூட்ட முடிவுகளை பல்கலை வெளியிட வலியுறுத்தல்
செனட், சிண்டிகேட் கூட்ட முடிவுகளை பல்கலை வெளியிட வலியுறுத்தல்
UPDATED : செப் 09, 2023 12:00 AM
ADDED : செப் 09, 2023 10:45 AM
சென்னை:
பல்கலைகளின் செனட், சிண்டிகேட் அமைப்பின் கூட்ட முடிவு மற்றும் தீர்மானங்களை, வெளிப்படையாக ஆன்லைனில் வெளியிட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளின் நிர்வாகத்தில், பல்வேறு சர்ச்சைகளும், விதிமீறல் புகார்களும் அவ்வப்போது எழுகின்றன. அதாவது, கல்வி நிறுவனங்கள் தொடர்பான நிர்வாக முடிவுகளில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீடு உள்ளதால் இது போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், அனைத்து அரசு பல்கலைகளிலும், சிண்டிகேட், செனட் போன்ற ஆட்சி மன்றக்குழு, ஆட்சிமன்ற பேரவை ஆகியவற்றின் ஆலோசனை கூட்ட முடிவு மற்றும் தீர்மானங்களை, பல்கலைகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.பல்கலையின் ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, கல்லுாரிகளின் இணைப்பு அங்கீகாரம், ஓய்வூதியம், பதவி உயர்வு. ஆராய்ச்சி பணிகள், பாடத்திட்டம் தயாரித்தல், தரம் உயர்த்துதல் போன்ற அனைத்து பணிகளுக்கும், சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படுவதால், அதை பொதுமக்களும், கல்வியாளர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, நெட், செட் சங்கம் என்ற பட்டதாரி ஆசிரியர் அமைப்பின் ஆலோசகர், ஏ.ஆர்.நாகராஜன் கூறியதாவது:
கல்லுாரிகளுக்கான அங்கீகாரம், ஆசிரியர் நியமன ஒப்புதல், மாணவர் சேர்க்கை அனுமதி போன்ற பல அம்சங்கள், பல்கலைகளிலேயே கையாளப்படுகின்றன. எனவே, பல்கலைகளின் சிண்டிகேட், செனட் கூட்ட முடிவுகளை, அந்தந்த கூட்டம் முடிந்ததும், பல்கலையின் இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதை பொதுமக்கள், கல்லுாரி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள் பார்த்து கொள்ள முடியும். இதன்மூலம், வெளிப்படையான நிர்வாகத்தை பல்கலையும், உயர்கல்வித்துறையும் உறுதி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
