UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 04:44 PM
மதுரை:
மதுரையில் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முறைகேடு விவகாரத்தில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.,) உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை விசாரணையை துவங்கியது.மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு நடந்தது. ஏப்ரலில் விடைத்தாள் திருத்தப்பட்டது. மதுரை விடைத்தாள்கள் திருத்தப்பட்ட முகாமில் ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே கையெழுத்தாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் அதிக மதிப்பெண்கள், சென்டம் மதிப்பெண் பெற்றிருந்ததால் சந்தேகம் அடிப்படையில் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.இந்த விவகாரம் தொடர்பாக தேர்வுத்துறை அதிகாரிகள் 4 மாதங்களாக விசாரித்தனர். சம்பந்தப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோர், 5 ஆண்டுகளுக்கு தேர்வில் பங்கேற்க ஏன் தடைவிதிக்க கூடாது என மகனுக்கு கல்வித்துறை அனுப்பிய நோட்டீஸூக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை விசாரித்து செப்., 18ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.இதன்படி உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார். தேர்வு முறைகேடு தொடர்பாக இத்தனிப்படை விசாரணையை துவக்கியது.
