UPDATED : செப் 11, 2023 12:00 AM
ADDED : செப் 11, 2023 05:00 PM
சிவகாசி:
மரங்கள் இயற்கை நமக்கு கொடுத்த கொடை. மனிதன் உயிர் வாழவே மரத்தின் துணை தேவை என்ற போதிலும் மரத்தினால் நமக்கு கிடைக்கும் சிறு சிறு உதவிகள் ஏராளம். புவி வெப்பமயமாதலை தடுக்கவும் காற்றில் ஆக்சிஜன் அளவை கட்டுக்குள் வைக்கவும் மனிதன், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் பயன்படுகிறது.மேலும் மரங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள அசுத்த காற்றை உள்வாங்கி புதிய காற்றை வெளிவிடுகிறது. மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தி உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. பூமியில் இருந்து நீரை சுழற்சி செய்து காற்றில் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. மாசில்லாத நகரை உருவாக்கவும் மரங்கள் முக்கியம். நாளைய உலகில் மனித சமுதாயம் செம்மையாக வாழ காடுகளின் பங்கு மிக முக்கியம். அதற்கு நாம் இன்று அதற்குரிய மரக்கன்றுகளை நட்டு பேண வேண்டும் என்று டாக்டர் அகிரா மியாவாகி கூறியுள்ளார்.அந்த வகையில் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரியில் 2020 ஆக. 15ல் நாட்டிலேயே முதன்முறையாக 12 ஆயிரம் மரக்கன்றுகள் மியாவாகி முறையில் நட்ட முதல் கல்லுாரி என்ற பெருமை பெற்றது. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பரில் மியாவாகி முறையில் 6113 மரக்கன்றுகள், 2021 சுதந்திர தினத்தில் 150 க்கும் மேற்பட்ட பல வகையான 40 ஆயிரம் மரக்கன்றுகள் ஒரு லட்சம் சதுர அடியில் நட்டு சாதனை படைத்தது. தொடர்ந்து 2022 ல் 4150 மரக்கன்றுகளும், 2023ல் 38 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டது.நிர்வாக குழு தலைவர் ராமலிங்கம், செயலாளர் சிங்காரவேல், துணை செயலாளர் குணசிங் செல்லத்துரை தாளாளர் டென்சிங், நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, அண்ணாமலை, அபிரூபன், அய்யன் கோடீஸ்வரன் முயற்சியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டது. இக்கல்லுாரியில் 7000க்கும் மேற்பட்ட பலவிதமான மரங்கள் நன்கு வளர்ந்த நிலையில், தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் உள்ள கல்லுாரி வளாகமாக மாறி உள்ளது.கல்லுாரியில் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் இதற்கான முதல் விதை போட்டனர். மியாவாகி முறையில் மரங்கள் 10 மடங்கு வேகமாக அடர்த்தியாகவும் வளரும். அதனை இங்கு நிரூபித்துள்ளோம். கோவையைச் சேர்ந்த காற்றாலை நிறுவனம், முன்னாள் மாணவர்களின் முயற்சியால் 35 ஆயிரம் மேற்பட்ட மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. இங்குள்ள மரங்களுக்கு ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. 2019 ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பசுமை வளாகம் விருதை மாநில அளவில் எங்கள் கல்லுாரிக்கு வழங்கி சிறப்பித்துள்ளது என சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி முதல்வர் அறிவழகன் கூறினார். கல்லுாரி வளாகத்தில் உள்ம மரங்களால் பசுமையானதாகவும் படிப்பதற்கு ஏற்ற சூழலும் உள்ளது. மியாவாகி காட்டினால் பல்லுயிர் பெருக்கம் உருவாகின்றது. காடுகளை அழிக்க அழிக்க மழை வளம் குறைந்து நகரும் மாசடைந்து வருகின்றது. இந்நிலையில் இங்கு உருவாக்கப்பட்ட மியாவாகி காடுகளால் நகர் பசுமையாகவதோடு மழை பொழியவும் முக்கிய காரணமாக அமைகிறது என சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லுாரி மாணவர் கிரி கூறினார்.
