UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 09:36 AM
தங்கவயல்:
கேசம்பள்ளி அரசு கன்னட உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.தங்கவயல் வட்டார கல்வித் துறைக்கு உட்பட்ட கேசம்பள்ளி அரசு கன்னடப் பள்ளியில் நேற்று, அறிவியல் கண்காட்சி நடந்தது. இப்பள்ளியில் படித்து வரும் மாணவ - மாணவியர், தங்களின் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினர். 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் குழுக்களாகவும், தனி நபராகவும் விஞ்ஞானம் சார்ந்த படைப்புகளை தங்களின் செயல்திறன் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.சந்திரயான் - 3ன் உலகம் வியக்க வைத்த சாதனையை, மாணவர்கள் கண்காட்சியில் இடம் பெற செய்திருந்தனர். சூரிய குடும்பத்தின் செயல்பாடுகள், தாவரங்களின் வளர்ச்சி, நீரின் தன்மை, சூரிய ஒளியின் சக்தி என பல்வேறு தலைப்புகளில் மாணவர்களின் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. மாணவர்களையும், அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியை மஞ்சுளா பாராட்டினார்.அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் ரவி ரெட்டி பேசுகையில், மாவட்ட அளவில் நடைபெறும் கண்காட்சி போல, ஒரு கிராமத்து உயர்நிலைப் பள்ளியில் செய்திருப்பது பெருமை அளிக்கிறது. தனியார் பள்ளி கான்வென்ட்டுகளில் படித்தால் மட்டுமே கவரவம் என்றிருப்பதை மாற்றியுள்ளது. இந்த அரசுப் பள்ளி. இஸ்ரோ விஞ்ஞானிகளில் பல கன்னடர்கள் உள்ளனர். இப்பள்ளியின் மாணவர்களும் விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும். இப்போதிருந்தே அந்த எண்ணத்தோடு அக்கறையாக படியுங்கள், என்றார்.
