UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 09:58 AM
மதுரை:
என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மனநல துாதுவர்களாக மாறி சக நண்பர்கள், உறவினர்களிடம் மனச்சோர்வை நீக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மதுரை அரசு மருத்துவமனை மனநலப் பிரிவு துறைத்தலைவர் கீதாஞ்சலி தெரிவித்தார்.அமெரிக்கன் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கான தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மருத்துவமனை மனநலப் பிரிவு சார்பில் நடத்தப்பட்டது. டாக்டர் கீதாஞ்சலி பேசியதாவது: உலகளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்கிறார். இந்தியாவில் மகராஷ்டிராவை அடுத்து தமிழகம் 2ம் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மனநல சிகிச்சை என்ற வார்த்தையை வெட்கப்படக் கூடிய வார்த்தையாக சமுதாயத்தில் பார்க்கின்றனர். அதற்கான உதவியை நாடுவது தவறில்லை. அந்த பிம்பத்தை உடைத்தெறியும் போர்வீரர்களாக என்.எஸ்.எஸ்., மாணவர்கள் செயல்பட வேண்டும். மனநல துாதுவர்களாக சக நண்பர்கள், உறவினர்களிடம் மனச்சோர்வை நீக்கி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும், என்றார்.டாக்டர் கவிதா பேசுகையில், முகநுால் நட்பை விடுத்து நேரடியாக பழகக்கூடிய நண்பர்களை சம்பாதியுங்கள். உங்கள் பிரச்னைகளை அவர்களிடம் சொன்னால் தீர்வு கிடைக்கும் என்றார். பொருளாதாரத்துறை கண்ணபிரான் ஏற்பாடுகளை செய்திருந்தார். டாக்டர் கார்த்திக் நன்றி கூறினார். அரசு நர்சிங் கல்லுாரி மாணவிகளின் மைம் ஷோ நடந்தது.
