UPDATED : செப் 13, 2023 12:00 AM
ADDED : செப் 13, 2023 09:47 AM
மதுரை:
அரசு உத்தரவுகளை உரிய முறையில் பின்பற்றி நீதிமன்றத்தில் அவதுாறு வழக்குகள் வராமல் பணியாற்றுங்கள் என கல்வி அதிகாரிகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்தார்.மதுரையில் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்ட கல்வி அதிகாரிகள், தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் கண்ணப்பன் தலைமையில் நடந்தது. துணை இயக்குநர் (சட்டம்) சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். சட்ட அலுவலர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்ணப்பன் பேசியதாவது:
கல்வித்துறை தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கலாகும் வழக்குகளை குறைக்க டி.இ.ஓ.,க்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இத்துறையில் நீதிமன்ற வழக்குகள் அதிகம் தொடரப்படுகின்றன.அரசு உத்தரவுகள், ஆசிரியர், அலுவலர்களுக்கான பதவி உயர்வு, சம்பள உயர்வு குறித்த செயல்முறைகளை டி.இ.ஓ.,க்கள் உரிய நேரத்தில் பின்பற்றினால் வழக்குகளை தவிர்க்க முடியும். தற்போது 98 அவதுாறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சம்பந்தப்பட்ட டி.இ.ஓ.,க்கள் இதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மாவட்ட, வட்டார அளவில் நீதிமன்ற வழக்குகள் தொடர்பாக ஆய்வு செய்ய வேண்டும். சாதாரண வழக்குகளை அவதுாறு வழக்குகளாக மாறுவதற்கு வாய்ப்பு கொடுத்து விட வேண்டாம்.இவ்வாறு பேசினார்.
