சனாதன எதிர்ப்பு சுற்றறிக்கை வாபஸ் பெற்ற அரசு கல்லுாரி
சனாதன எதிர்ப்பு சுற்றறிக்கை வாபஸ் பெற்ற அரசு கல்லுாரி
UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 10:01 AM
சென்னை:
சனாதனம் குறித்த எதிர்ப்பு கருத்துகள் பகிரலாம் என மாணவியருக்கு திருவாரூர் அரசு கல்லுாரி முதல்வர் அனுப்பிய இரண்டு சுற்றறிக்கைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.திருவாரூரில் உள்ள திரு.வி.க., அரசு கலை கல்லுாரி பொறுப்பு முதல்வர் ராஜாராமனுக்கு, திருவாரூர் மாவட்ட தி.மு.க., செயலர் பூண்டி கலைவாணன், கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார், அதில், அண்ணாதுரை பிறந்த நாளான செப்.,15ல் காட்டூரில் நடக்கும் நிகழ்ச்சியில், சனாதன எதிர்ப்பு கருத்துகளை தெரிவிக்க, மாணவியரை பங்கேற்க வைக்குமாறு தெரிவித்திருந்தார்.அதன்படி, திருவாரூர் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில், சனாதன எதிர்ப்பு கருத்துகளை மாணவியர் பகிரலாம் என, கல்லுாரி முதல்வர் ராஜாராமன், சுற்றறிக்கை அனுப்பினார். இந்த விவகாரம் பல்வேறு தரப்பிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின், மாணவியர் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில், கருத்து தெரிவிக்கலாம் என, அடுத்த சுற்றறிக்கை அனுப்பினார். அதுவும் சர்ச்சையானது.இந்நிலையில், இந்த இரண்டு சுற்றறிக்கைகளும் வாபஸ் பெறப்படுவதாக, கல்லுாரி முதல்வர் ராஜாராமன் நேற்று அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து, கல்லுாரி முதல்வர் ராஜாராமனிடம் விளக்கம் கேட்டு, கல்லுாரி கல்வி இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பிஉள்ளது. ஹிந்து எதிர்ப்பு பிரசாரம் பா.ஜ., கடும் கண்டனம்நடவடிக்கை எடுக்க வேண்டும்
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கனகசபாபதி கண்டன அறிக்கை:
திருவாரூர் அரசு கல்லுாரி மாணவர்கள், சனாதன எதிர்ப்பு கருத்துகளை, அண்ணாதுரை பிறந்த நாளில் தெரிவிக்க வேண்டும் என, அக்கல்லுாரி முதல்வர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.எதிர்ப்பு எழுந்ததும், மாணவர்கள் தங்கள் விருப்பம்போல செயல்படலாம் என, மாற்றி அறிவித்துள்ளார். இது, திட்டமிட்ட ஹிந்து மத எதிர்ப்பு பிரசாரம். தமிழக அரசின் ஆதரவில்லாமல், ஒரு அரசு கல்லுாரி முதல்வர் இவ்வாறு செயல்பட முடியாது. இது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, திருவாரூர் அரசு கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
