UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:32 PM
மதுரை:
வெளிநாட்டு வேலைக்கு அதிக கட்டணம் தந்து ஏமாறவேண்டாம். அரசின் ஏஜன்சியை தொடர்பு கொள்ளலாம்&'&' என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மகேஸ்வரன் தெரிவித்தார்.மதுரை அரசு நர்சிங் கல்லுாரியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு வரவேற்பை பொறுத்து தகவல் தெரிவிக்கிறோம். இதுவரை 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம். சவூதி அரேபியாவுக்கு நர்ஸ்கள் தேவை என்பதால் அந்நாட்டுக்கு நர்ஸ்களை அனுப்பி வருகிறோம்.தமிழகத்தில் 130 ஏஜன்சிகள், இந்தியாவில் 3000 ஏஜன்சிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வாங்கி தருகின்றன. நாம் அரசு ஏஜன்சி என்பதால் குறைந்த கட்டணம் பெறுகிறோம். ஜெர்மனி, பிரிட்டன், சவுதி அரேபியாவில் நர்ஸ்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. பிரிட்டன், அயர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்ல வேண்டுமெனில் ஓ.இ.டி., எனப்படும் தொழில்முறை ஆங்கிலத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.அதன் பின் நர்சிங் தேர்வு தொடர்பாக தேர்வு வைத்து தேர்ந்தெடுப்பர். வேலை தரும் நிறுவனங்களே விசா, விமான டிக்கெட் தந்துவிடும். எங்களிடம் பதிவு செய்தால் வெளிநாட்டு நிறுவன வேலைவாய்ப்பு வரும் போது தகவல் தெரிவிப்போம். அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மை, அங்கீகாரத்தை ஆய்வு செய்தபின்பே இங்கிருந்து ஆட்களை அனுப்புவோம்.நர்ஸ் வேலைக்கு அடுத்ததாக பிளம்பர், எலக்ட்ரீசியன் வேலைக்கு வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்கள் குவைத் நாட்டுக்கு தேவைப்படுகின்றனர். பிற துறைகளில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற மொத்த வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை, என்றார். அரசு மருத்துவக் கல்லுாரி டீன் ரத்தினவேல், மதுரை, சென்னை நர்சிங் கல்லுாரி முதல்வர்கள் ராஜாமணி, சங்கர் சண்முகம் உடனிருந்தனர்.
