UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:30 PM
தமிழகத்தில் 1,021 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.,) நடத்திய எழுத்து தேர்வு முடிவு இதுவரை வெளியிடப்படாததால் முதுநிலை படிப்புகளில் சேரும் பி.ஜி., கலந்தாய்வில் பங்கேற்க காத்திருப்போர் குழப்பத்தில் உள்ளனர்.அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை எம்.ஆர்.பி., மூலம் நிரப்ப ஏப்ரலில் 91 மையங்களில் கணினி வழி எழுத்து தேர்வு நடந்தது. 25 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என எம்.ஆர்.பி., தெரிவித்திருந்த நிலையில் இதுவரை வெளியிடப்படவில்லை. தற்போது முதுநிலை மருத்துவ படிப்புக்கான இறுதி கலந்தாய்வு நடந்து வருகிறது. எம்.ஆர்.பி., தேர்வு முடிவை பார்த்து பணியில் சேருவதா அல்லது பி.ஜி., படிப்பதா என பலர் குழப்பத்தில் உள்ளனர்.தேர்வர்கள் கூறியதாவது:
எம்.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றால் பணிக்கு சென்றுவிடலாம். தேர்ச்சி பெறாத பலர் பி.ஜி., படிக்க திட்டமிட்டுள்ளனர். கலந்தாய்வுக்கு பின் தேர்வு முடிவு வெளியிட்டால் பி.ஜி., படிப்புக்கு செல்வது பலருக்கு பாதிக்கும். இறுதி கலந்தாய்வுக்கு முன் இந்த தேர்வு முடிவை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என்றனர்.
