UPDATED : செப் 15, 2023 12:00 AM
ADDED : செப் 15, 2023 04:59 PM
கோவை:
கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டது.கரூர் வைசியா வங்கி மற்றும் அறம் பவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து, இத்தேர்தலை வழிநடத்தின. முதலில், தேர்தல் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின், வேட்பு மனு பெற்று, பரிசீலனை செய்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட மாணவர்கள், ஒரு வாரமாக மாணவ, மாணவியரிடம் ஓட்டு சேகரித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை மணிமாலா, அறம் பவுண்டேஷன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவன அறங்காவலர் கோகுல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஓட்டுப்பதிவு நடந்தது; மாணவ, மாணவியர் ஆர்வமுடன் ஓட்டளித்தனர்.பள்ளிக்கான ஜனாதிபதியாக ருத்ரபிரியாமணி, பிரதமராக சஹானா ஆஸ்மி, கல்வி அமைச்சராக ஆகாஷ், மாணவர் நலன் அமைச்சராக சத்னாஸ்ரீ, விளையாட்டுத்துறை அமைச்சராக தினேஷ்குமார், கலை மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சராக சாய் சரண், சுற்றுச்சூழல் அமைச்சராக மாவிஷ், சுகாதாரத்துறை அமைச்சராக சக்தி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.மக்களாட்சியின் முக்கியத்துவம் குறித்து மாணவ பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாகவும், சிறந்த நிர்வாகிகளாகவும் நாட்டை நல்வழி நடத்துவதற்கும், பள்ளியை பராமரிப்பது தொடர்பாகவும் விளக்கப்பட்டது.
