கல்லூரிக்கு மாறும் பள்ளி விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை
கல்லூரிக்கு மாறும் பள்ளி விடுதிகள் ஆதிதிராவிடர் நலத்துறை நடவடிக்கை
UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 08:13 AM
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி விடுதிகளில் சிலவற்றை, கல்லுாரி விடுதிகளாக மாற்ற, அரசு தரப்பில் ஆலோசனை நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.தொலைதுார கிராமங்களில் இருந்து, கல்வி கற்க செல்லும் மாணவ - மாணவியர், போதிய அளவு விடுதி வசதி இல்லாததால், தங்கள் படிப்பை நிறுத்தும் நிலையை தவிர்க்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியருக்கு விடுதிகள் நடத்தப்படுகின்றன. பள்ளி மாணவர்களை பொறுத்தவரை, பெற்றோர் பெரும்பாலும் தங்கள் வீடு அருகில் உள்ள பள்ளிகளிலேயே, படிக்க வைக்கின்றனர்.ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சேரும் மாணவர்களில் பலர், இரவு உணவு முடித்து விட்டு, துாங்குவதற்கு தங்கள் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர்.அதே நேரத்தில், கல்லுாரி மாணவ - மாணவி யருக்கு விடுதி தேவை அதிகரித்துள்ளது. எனவே, பள்ளி விடுதிகளில், சிலவற்றை கல்லுாரி விடுதிகளாக மாற்ற, அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுகுறித்து, ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் கல்லுாரி விடுதிகளுக்கான தேவை உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து.ஏராளமான மாணவ -மாணவியர் சென்னையில் படிக்க விருப்பப்பட்டு, சென்னையில் உள்ள கல்லுாரிகளில் சேருகின்றனர். அவர்கள் தங்குவதற்கு விடுதிகள் போதுமான அளவில் இல்லை.பல முக்கிய நகரங்களிலும், இதே நிலை தான். எனவே, பள்ளி விடுதிகளை, கல்லுாரி விடுதிகளாக மாற்றுவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு முடிந்ததும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
