UPDATED : செப் 16, 2023 12:00 AM
ADDED : செப் 16, 2023 05:04 PM
புதுச்சேரி:
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு கல்லுாரியில், உயிர்த் தொழில்நுட்பவியலில் அண்மைக் கால வளர்ச்சி குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் நடந்தது.இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி கருத்தரங்கம் அறையில் நடந்த கருத்தரங்கை துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களே கலைக் கல்லுாரிகளில் சேர்வார்கள் என்ற நிலை மாறி, தற்போது அரசு கல்லுாரிகளில் மாணவர்கள் அதிகம் படித்து வருகின்றனர். கதிர்காமம் அரசு கல்லுாரியில் படித்து முடித்த மாணவர்கள் பல மாநிலங்கள் மற்றும் பல நாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். இக்கல்லுாரிக்கு அடுத்த ஆண்டு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கல்லுாரியில் முதல் முறையாக பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.தற்போது இளநிலை எழுத்தர், முதுநிலை எழுத்தர், உதவியாளர், பண்டகக்காப்பாளர், சுருக்கெழுத்தர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அடுத்து பொதுப்பணித்துறையில் இளநிலைப் பொறியாளர், உதவிப் பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு மூலமாக மட்டும் வேலை வாய்ப்பு வழங்காமல் பல தொழிற்சாலைகளை தொடங்கி அதன் மூலமாக வேலை வாய்ப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.கலைக் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும் என்றார். கருத்தரங்கில், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., உயர் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அமன் சர்மா, கல்லூரி முதல்வர் கிஷோர் ஜான், உயிர்த் தொழில் நுட்பவியல் தலைவர் காந்திபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
