பஸ் வசதியின்றி தவிக்கும் மாணவர்கள்: 6 கி.மீ., துாரம் நடந்து செல்லும் அவலம்
பஸ் வசதியின்றி தவிக்கும் மாணவர்கள்: 6 கி.மீ., துாரம் நடந்து செல்லும் அவலம்
UPDATED : செப் 18, 2023 12:00 AM
ADDED : செப் 18, 2023 06:25 PM
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து 6 கி.மீ., துாரத்திலும், அய்யம்பேட்டையில் இருந்து 6 கி.மீ., துாரத்திலும் அமைந்துள்ளது மேல உத்தமநல்லுார் கிராமம்.கொரோனா பாதிப்பிற்கு முன், இக்கிராமத்திற்கு நான்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது, நான்கு ஆண்டுகளாக மீண்டும் கிராமத்திற்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருவையாறு அல்லது அய்யம்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ - மாணவியரும், டூ - வீலர் வசதி இல்லாதவர்களும் 6 கி.மீ., துாரத்திற்கு நடைபயணமாக சென்று வருகின்றனர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.இது குறித்து, கிராம மக்கள் கூறியதாவது:
பஸ் வசதி இல்லாத நிலையில், 6 கி.மீ.,க்கு நடந்து சென்று வருகிறோம். கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாமல் இருப்பதால், பெண் கொடுப்பதிலும், பெண் எடுப்பதிலும் கூட சிக்கலை சந்திக்கிறோம். எங்கள் கிராமம் மட்டுமல்ல, பொன்னாவரை, ஆக்கினாதபுரம், உப்புகாசிப்பேட்டை, மணலுார் போன்ற கிராம மக்களும் பஸ் வசதிக்காக தவித்து வருகின்றனர். அரசு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கூறினர்.
