UPDATED : அக் 07, 2023 12:00 AM
ADDED : அக் 07, 2023 05:15 PM
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, 259 மாணவர்கள் படிக்கின்றனர்.கடந்தாண்டு பொதுத்தேர்வில் இப்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.இந்நிலையில், காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர், ஒரு நாள் பள்ளி தலைமை ஆசிரியராகவும், இரண்டாவது மதிப்பெண் பெறும் மாணவர் உதவி தலைமையாசிரியராகவும் பொறுப்பு வழங்கப்படும் என, பள்ளி தலைமை ஆசிரியர் ஹரிகிருஷ்ணன் அறிவித்தார்.அதன்படி, தேர்வில் 10ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தர்ஷன், இரண்டாவது மதிப்பெண் - தமிழ் வழியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் சுவின்ராஜ் ஆகியோர் முறையே, தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் என பொறுப்பேற்கும் நிகழ்ச்சி, பள்ளிவளாகத்தில் நேற்று நடந்தது.ஒரு நாள் பள்ளி தலைமையாசிரியராக தர்ஷனுக்கு, பள்ளி தலைமையாசிரியர் பொறுப்புகளை வழங்கினார். இதேபோல, உதவி தலைமையாசிரியராக சுவின்ராஜ் பொறுப்பேற்றார்.தலைமையாசிரியர் கூறியதாவது:
மற்ற மாணவர்களும் நன்றாக படிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டது.ஆசிரியர்கள் அனைவரது கூட்டு முயற்சியே பள்ளி வெற்றிக்கும், பல செயல்களுக்கும் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.
