மாணவர்கள் ஆபத்து பயணம்: கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
மாணவர்கள் ஆபத்து பயணம்: கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 09:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி:
கடத்துாரில், 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லுாரிகளுக்கு, வெளியூர், வெளி மாவட்டங்கள் செல்ல, கடத்துார் நகரத்திற்கு தான் வரவேண்டும். பின், இங்கிருந்து தர்மபுரி செல்ல வேண்டும். மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக காலை மற்றும் மாலையில், அரசு பஸ்கள் பொம்மிடி - கடத்துார் வழியாக இயக்கப்படுகிறது. இந்நிலையில், காலையில், 8:00 மணியிலிருந்து, 9:00 மணிக்குள் இயக்கப்படும் பஸ்களில், அதிகளவு கூட்டம் ஏறுவதால், மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது.அரசு பஸ்களும் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால், ஒரே பஸ்சில், 100-க்கும் மேற்பட்ட மாணவ, -மாணவியர் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்கின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், கடத்துாரிலிருந்து தர்மபுரிக்கு காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
