ஆபத்து காலங்களில் கைகொடுக்க வருகிறது மொபைல் செயலி!
ஆபத்து காலங்களில் கைகொடுக்க வருகிறது மொபைல் செயலி!
UPDATED : அக் 08, 2023 12:00 AM
ADDED : அக் 08, 2023 05:15 PM
புதுச்சேரி:
புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கு வழிகாட்டுவதற்காக பிரத்யேக செயலியை விரைவில் புதுச்சேரி அரசு அறிமுகம் செய்ய உள்ளது.சுனாமி, கனமழை, வெள்ளப் பெருக்கு, புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் போது பெரும் பொருள் சேதம் மற்றும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க பேரிடர் ஆபத்து காலங்களில், பொதுமக்களை ஒருங்கிணைத்து உதவ புதுச்சேரி அரசு, பொதுப்பணித்துறை மூலம் பிரத்யேக செயலியை உருவாக்க முடிவு செய்துள்ளது.இதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் முடிந்துள்ள நிலையில் தொழில்நுட்ப ஆய்வு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. விரைவில் இந்த செயலி புதுச்சேரி மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. செயற்கைகோள் வாயிலாக வானிலை ஆய்வு மையங்கள் சேகரிக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து, இந்த செயலி வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எஸ்.எம்.எஸ்., ஒலிப்பதிவுகள் மூலமாக உடனுக்குடன் முன் எச்சரிக்கை தகவல்களை இந்த செயலி வழங்கும். ஆபத்து நேரத்தில் சமயோஜிதமாக செயல்பட வேண்டிய ஆலோசனைகளையும் தெரிவிக்கும். வெள்ளத்தை கண்காணிக்கும் வகையில் மத்திய நீர் ஆணையம் பிளட் வாட்ச் என்ற செயலியை ஏற்கனவே 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக் காக அறிமுகப்படுத்தியுள்ளது.மத்திய நீர் ஆணையத்தின் இந்த செயலி வெறும் தகவலை பகிர்வதோடு நின்று விடுகின்றது. ஆனால், புதுச்சேரி அரசு அறிமுகப்படுத்த உள்ள செயலியில் அந்த பகுதிகளில் உள்ள முகாம்கள், அவசர எண்கள், ஆபத்து காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அரசு அதிகாரிகளின் மொபைல் எண்கள் அனைத்தும் பகிரப்பட்டு இருக்கும்.இச்செயலி வழியாகவே அவசர உதவி கேட்டு நிவாரண உதவி களை பெற முடியும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இச்செயலில் புதுச்சேரியில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள், அங்குள்ள நீர்நிலைகள், வாய்க்கால் துார்வாருதல் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற உள்ளது.தமிழகம் உள்பட பிற மாநில அணைகளில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு, அவை கடந்து செல்லும் பாதைகள் உள்ளிட்ட பயனுள்ள தகவல்களை பகிரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த செயலி ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் பயன்படுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.பொதுப்பணித் துறை செயலர் மணிகண்டன் கூறுகையில், பேரிடர் சவால்களை எதிர்கொள்ள இந்த செயலி புதுச்சேரி மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஒவ்வொருவரின் மொபைலில் இந்த செயலி இருந்தால் அவரால் பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் முன் எச்சரிக்கை தகவல்களை அறிந்து, அதற்கேற்ப விழிப்புணர்வுடன் இருக்க முடியும். விரைவில் இந்த செயலியை அரசு அறிமுகம் செய்ய உள்ளது என்றார்.
