UPDATED : அக் 10, 2023 12:00 AM
ADDED : அக் 10, 2023 05:16 PM
சென்னை:
வேளாண் இயந்திரங்களை, உழவன் செயலி வாயிலாக வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வருவாய் ஈட்ட, மத்திய அரசின் நிதி உதவியின் கீழ், பல்வேறு தொழில்களை செய்யும் சங்கங்களாக மாற்றப்பட்டு வருகிறது.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
வேளாண் இயந்திரங்களை, உழவன் செயலி வாயிலாக வாடகைக்கு விட ஏதுவாக கூட்டுறவு சங்கங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள உழவு கருவிகள், இயந்திரங்கள் சேர்க்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இ - வாடகை செயலி வாயிலாக இயந்திரங்களை வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வேளாண் இயந்திரங்கள் பயன்படாத நேரத்தை குறைத்து, அதிக அளவில் வாடகைக்கு விட, உழவன்/ இ - வாடகை செயலியில் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, நேரடியாக அணுகுவோருக்கும் வாடகைக்கு விடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
