கல்வித்துறை மருத்துவ முகாம் ரத்து மாற்றுத்திறன் மாணவர்கள் பாதிப்பு
கல்வித்துறை மருத்துவ முகாம் ரத்து மாற்றுத்திறன் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 05:33 PM
மதுரை:
மதுரையில் அரசு டாக்டர்கள் போராட்டம் காரணமாக மாற்றுத்திறன் மாணவர்களுக்காக கல்வித்துறை ஏற்பாடு செய்த 15 நாள் மருத்துவ முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.மதுரை மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்குமாரை கண்டித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் அக்.,3 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். அக்.,7 முதல் மாநிலம் தழுவிய போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில் மதுரையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்காக அக்.,10 முதல் நவ.,6 வரை 15 கல்வி ஒன்றியங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்தது.இதில் மருத்துவ உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் இருந்தன. முதல் முகாமை ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் கலெக்டர் சங்கீதா நேற்று துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் டாக்டர்கள் போராட்டத்தால் முகாம்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான மாற்றுத்திறன் மாணவர்கள் உபகரணங்கள் பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், இம்முகாம்களில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்க இருந்தனர். ஒரு முகாமில் குறைந்தது 7 சிறப்பு டாக்டர்கள் பங்கேற்க வேண்டும். முதல்நாள் இரவு வரை அவர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேசினர். உடன்படாததால் முகாம் ரத்து செய்யப்பட்டது என்றார்.
