UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 05:37 PM
கீழக்கரை:
கீழக்கரை அருகே கொம்பூதி கிராமத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் கிராம மக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவது குறித்தும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராமப்புற மாணவர்களும் உயர்கல்வி கற்க வேண்டும், என்றார்.அவர் கூறியதாவது:
பல்வேறு துறைகள் மூலம் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். பொதுவாக கிராமங்களில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்படிப்புக்கு செல்லாமல் நின்று விடுகிறார்கள்.பிள்ளைகளை பெற்றோர் மேற்படிப்பு படிக்க வைக்க வேண்டும். மாணவர்களும் தொடர்ந்து தங்கள் விருப்பமுள்ள பாடங்களை தேர்வு செய்து உயர் கல்வி வரை படிக்க வேண்டும். தற்போது தொழிற்பயிற்சியுடன் வேலை வாய்ப்புகள் தனியார் துறையில் வழங்கப்படுகின்றன. அரசு பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு அரசே பயிற்சி அளிக்கிறது. இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றார்.ஊராட்சியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதா என பொதுமக்களிடம் கேட்டறிந்தார். திருப்புல்லாணி பி.டி.ஓ., ராஜேஸ்வரி, துணை தாசில்தார் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.
