மண்ணிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்: அணு விஞ்ஞானி தகவல்
மண்ணிலிருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்: அணு விஞ்ஞானி தகவல்
UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 11:14 AM
பரமக்குடி அருகே சத்திரக்குடி வாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிகரம் தொடும் சிந்தனைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.பள்ளி தாளாளர் வாசன் தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். முதல்வர் வனிதா வரவேற்றார். இதில் சென்னை அணு விஞ்ஞானி டேனியல் செல்லப்பா மாணவர்கள் மத்தியில் பேசி கலந்துரையாடினார்.அப்போது விஞ்ஞானி டேனியல் செல்லப்பா கூறியதாவது:
மாணவர்களுக்கு விஞ்ஞானிகளின் சக்சஸ் ஸ்டோரி குறித்து கூறுகிறேன். அந்த வகையில் மின்சாரம் என்றால் என்ன, காற்று, நீராவி, அருவி நீர் போன்றவற்றின் மூலம் மின்சாரம் தயார் செய்ய முடியும். மேலும் அணு பிளவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.நம் நாட்டில் தமிழ்நாடு மணவாளக்குறிச்சி, கேரளா சவுரா, ஒடிசா பீட்ஸா பகுதி மண் மூலம் மின்சாரம் தயார் செய்ய முடியும். நாட்டிலுள்ள தங்கம் உள்ளிட்ட வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டாலும், கடவுளின் ஆசிர்வாதத்தால் நம் மண்ணை வைத்து வளமாக இருக்கலாம்.இதுகுறித்து 1945ல் டாக்டர் ஜஹாங்கீர் ஹோமி பாபா மண்ணில் உள்ள எனர்ஜி குறித்து தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் ஆராய்ச்சிகள் தொடர்கிறது. இவர் கூற்றின்படி, மண்ணில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்ற கண்டுபிடிப்பு நடக்கிறது. உலகில் இந்தியா இரண்டாவது மண்வளம் கொண்ட நாடாகும்.மோனோசைட் என்ற தாதுப் பொருள் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய பகுதியில் கிடைக்கிறது. இந்த வளத்தை வைத்துக் கொண்டு ஏன் வெளிநாட்டில் இருந்து நிலக்கரி, பெட்ரோல் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.மோனோசைட்டில் இருந்து தோரியம் 232 பிரித்து எடுக்க வேண்டும். அப்போது பாபா கூறிய கருத்துப்படி, மூன்று கட்டமாக செயல்பாடு நடக்கிறது. பின்னர் யுரேனியம் 233 ஆக மாறும். அப்போது மின்சாரம் தயாரிக்க முடியும். முன்பு அமெரிக்கர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர் ஹேர் பின் கூட செய்ய முடியாதவர்கள் என கூறி வந்தனர்.தற்போது கல்பாக்கத்தில் காமினி ரியாக்டர் (கல்பாக்கம் மினி ரியாக்டர்) 30 கிலோ வாட் நான்பவர் புரொடக்சன் செய்யப்படுகிறது. இதன் மூலம் உலகிற்கு இந்தியா மண்ணிலிருந்து மின்சாரம் தயாரிக்கப் போகிறது என்ற சிக்னல் கொடுக்கிறது. இதை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் இந்தியாவில் 400 முதல் 500 ஆண்டுகளுக்கு தேவையான எலக்ட்ரிக் சிட்டி எனர்ஜியை நம் மண்ணே வினியோகம் செய்யும், என்றார்.
