UPDATED : அக் 12, 2023 12:00 AM
ADDED : அக் 12, 2023 06:30 PM
வால்பாறை:
விஜயதசமி நாளில், இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பில் சேர்க்க வேண்டும், என, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வலியுறுத்தியுள்ளார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப் பகுதியில், 42 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த அங்கன்வாடி மையங்களில், 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.இந்நிலையில், அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புக்கான சேர்க்கை தற்போது நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி அங்கன்வாடி பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடி மையங்களை அழகுபடுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதிப்பிரியா கூறியதாவது:
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 48 அங்கன்வாடி மையங்களிலும், குழந்தைகள் மூளைத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 முதல் 4 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்றுத்தரப்படுகிறது.குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது. இங்கு குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன. கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப் படுகிறது. ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப சத்தான உணவு வழங்கப்படுகிறது.குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான உணவு வகைகள் வழங்கப்படுகிறது. வால்பாறையில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும், மழலையர் வகுப்புக்கள் துவங்கபட்டுள்ளன. விஜயதசமி நாளில் பெற்றோர்கள், இரண்டு வயது நிரம்பிய குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்பில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
