UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:20 AM
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் பேசியதாவது:
வேளாண், உழவர் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வருவாய், பேரிடர் மேலாண், பள்ளி கல்வி உள்பட பல்வேறு துறை நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன. முதல்வரின் காலை உணவு திட்டத்தில், மாவட்டத்தில், 90,034 பேர் பயன் பெறுகின்றனர். இதன்மூலம், 98.40 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.கலெக்டர் கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக கண்காணிப்பு அலுவலர் சங்கர், தலைவாசல் அருகே காமக்காபாளையத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நபார்டு திட்டத்தில், 22.28 லட்சம் ரூபாயில் நீரோடை குறுக்கே பாலம் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். அதேபோல் ஆத்துார் அரசு மருத்துவமனை, தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் இருப்பு குறித்து பார்வையிட்டு, மருத்துவர்களிடம் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, ஆத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகம், தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் பராமரிப்பு செய்யும் கோப்புகள், பதிவேடுகள்; நரசிங்கபுரம் நகராட்சியில், 46 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும் பூங்கா உள்ளிட்ட திட்டப்பணிகளை பார்வையிட்டார். மேலும், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.
