சுயநிதி பிரிவுகளால் சலுகைகள் மறுப்பு: அரசுப்பள்ளிகளில் தொடரும் பாரபட்சம்
சுயநிதி பிரிவுகளால் சலுகைகள் மறுப்பு: அரசுப்பள்ளிகளில் தொடரும் பாரபட்சம்
UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:21 AM
கோவை:
அரசுப்பள்ளிகளில் செயல்படும் சுயநிதி பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு, நலத்திட்ட பொருட்கள் வழங்காததோடு, சிறப்பு ஊக்கத்தொகையும் கிடைப்பதில்லை என்ற, புகார் எழுந்துள்ளது.அரசுப்பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மேல்நிலை வகுப்புகளில் புதிய பாடப்பிரிவு துவங்கப்பட்டுள்ளன. தற்காலிக ஆசிரியர்கள் நியமித்து, வகுப்பு கையாளப்படுகிறது. இப்பிரிவுகளில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள், மாணவர் சேர்க்கை அதிகமிருப்பின், தலைமையாசிரியர் விண்ணப்பிக்கும் பட்சத்தில், அப்பாடப்பிரிவு நிரந்தரமாக்கி, ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி, தகுதியான ஆசிரியர்கள் நிரப்புவது வழக்கம்.கடந்த பத்து ஆண்டுகளாக, சுயநிதி பாடப்பிரிவுகள், அதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் குறித்த பட்டியல் மட்டுமே, கல்வித்துறை பெற்று வருகிறது. இப்பாடப்பிரிவுகள் நிரந்தரமாக்காததால், லேப்டாப், சைக்கிள் போன்ற நலத்திட்ட பொருட்கள் இதில் மாணவர்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை. பிளஸ் 2 முடிப்போருக்கு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையும் வழங்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
