UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:23 AM
கோவை:
இஸ்ரேலில் நடக்கும் போர் பகுதியிலிருந்து, ஆபரேஷன் அஜய் மூலம் ஏழு பேர் கோவை திரும்பினர்.கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்ஆகியோர் கூறியதாவது:
இஸ்ரேலில் போர் நடந்து வருவதால், அங்குள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆப்பரேஷன் அஜய் திட்டத்தை துவக்கியது. தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் முதல் கட்டமாக சென்னை வந்தனர்.கோவை, கரூர், நாமக்கல், ஊட்டியை சேர்ந்த, இஸ்ரேலில் படித்து வந்த மாணவர்கள், பணியாற்றியவர்கள் என 7 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஊர் திரும்ப மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. கோவை விமான நிலையம் வந்த ஏழு பேர் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.இஸ்ரேலில் இருந்து கோவை திரும்பிய டாக்டர் திவாகர் கூறுகையில், இஸ்ரேலில் நான்கு ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தேன். அங்கு நிலவும் போர் சூழ்நிலையால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளேன். எங்களை மீட்க, மத்திய மாநில அரசுகள் தொடர்பில் இருந்தன.டெல் அவிவ்வில் உள்ள இந்திய துாதரகம், தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் முறையான ஏற்பாடுகளை செய்து பாதுகாப்புடன் எங்களை மீட்டு வந்தமைக்கு நன்றி. இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தான் அதிக அளவில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. வடக்கு பகுதியில் குறைவாக உள்ளது. தரை வழி தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.கோவையை சேர்ந்த முதுநிலை மருத்துவக் கல்லுாரி மாணவி ராஜலட்சுமி கூறுகையில், இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தான் தாக்குதல்கள் அதிகம். ராக்கெட் தாக்குதல்கள் வருவதற்கு ஒரு நிமிடம் முன்பே தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதற்குள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். பெரும்பாலான தாக்குதல்கள், அயர்ன் டோம் பாதுகாப்பால் முறியடிக்கப்பட்டு விடுகின்றன. உணவு, தண்ணீர், மின்சாரத்துக்கு பிரச்னை இல்லை.இஸ்ரேல் வடக்கு பகுதிகளில் லெபனான், ஹிஸ்புல்லா தாக்குதல்கள் நடத்தினால் பிரச்னை ஏற்படும். பாதுகாப்பாக எங்களை அழைத்து வர ஏற்பாடு செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி, என்றார்.
