UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 06:28 PM
காலியாக உள்ள பட்டதாரி கணித ஆசிரியர் பணிக்கு, தனக்கு பதவி உயர்வு வழங்கக் கோரி, சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் செல்வகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுவை விசாரித்த, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு, சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில், எத்தனை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எந்த பணி விதிகளின் கீழ், அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பதற்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.இதற்கு, மாநகராட்சி ஆணையர் அளித்த பதிலில், பதவி உயர்வு, இட மாற்றம் தொடர்பாக, மாநகராட்சி எந்த விதியும் வகுக்காததால், பள்ளி கல்வித் துறையின் விதிகள் பின்பற்றப்படுகின்றன. விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளிகளையும் சேர்த்து, 499 காலியிடங்கள் உள்ளன என கூறப்பட்டுள்ளது.அறிக்கையை பரிசீலித்த பின், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்குப் பதில், 50 சதவீத காலியிடங்களை இடமாறுதல் வாயிலாக நிரப்புகின்றனர். இடமாறுதல் வாயிலாக, நேரடி தேர்வுக்கான இடங்களை நிரப்பினால், வெளியில் இருந்து தேர்வு செய்து, ஒருபோதும் நிரப்ப முடியாமல் போய் விடும்; இதை ஏற்க முடியாது.இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இடமாறுதல் வாயிலாக, 79 காலியிடங்களை நிரப்பும் மாநகராட்சியின் நடவடிக்கை வருந்தத்தக்கது. இவ்வளவு அவசர முடிவெடுத்து, நடவடிக்கை எடுத்திருப்பதில் இருந்து, நேரடி தேர்வுக்கு பதில், இடமாறுதலுக்குதான் ஆர்வம் காட்டுவது தெரிகிறது. நீதிமன்ற உத்தரவை பெறாமல், தகவல் தெரிவிக்காமல், மாநகராட்சி எடுத்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.எனவே, 243 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வு வாயிலாக நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியத்தை, உடனடியாக சென்னை மாநகராட்சி கோர வேண்டும். போர்க்கால நடவடிக்கை எடுத்து, ஆறு மாதங்களுக்குள் தேர்வு நடவடிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிக்க வேண்டும். தேர்வானவர்கள் பட்டியலை மாநகராட்சியிடம், தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.இடமாறுதல் வாயிலாக நியமிக்கப்பட்ட 79 பேரும், மாநகராட்சி பள்ளிகளில் சேரலாம்; ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த பின், 79 பேரையும் பழைய இடங்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.மீதி 50 சதவீத இடங்களில், பதவி உயர்வு வாயிலாக நிரப்புவதற்கு, பணிமூப்பு பட்டியலை மாநகராட்சி தயாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில், இதற்கான பணிகளை மாநகராட்சி முடிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இந்த உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, விசாரணையை, நவம்பர் 23க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
