இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட 500 கி.மீ., நடந்து வந்த காந்தியவாதி
இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்ட 500 கி.மீ., நடந்து வந்த காந்தியவாதி
UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 06:18 PM
பெங்களூரு:
நாட்டுக்கு பெருமை சேர்ந்த சந்திரயான் - 3 வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளை பாராட்டுவதற்காக, திருச்சியில் இருந்து, 500 கி.மீ., துாரத்துக்கு காந்தியவாதி கருப்பையா பாதயாத்திரையாக பெங்களூரு வந்துள்ளார்.மதுரையைச் சேர்ந்தவர் காந்தியவாதி ம.கருப்பையா, 54. இவர் இவர், உலக அமைதி தினமான கடந்த, செப்., 21ல், திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ஆலத்துாரில் இருந்து, தேசபக்தியை வலியுறுத்தி, பெங்களூரு வரை பாதயாத்திரையைத் துவக்கினார்.சந்திரயான் - 3 வெற்றியை அடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதற்காக பெங்களூரு சஞ்சய்நகரில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலகத்துக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வழியாக வந்த அவருக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து, பெங்களூரில் காந்தியவாதி கருப்பையா நேற்று கூறியதாவது:
நான் கடந்த, 36 ஆண்டுகளாக, தேசபக்தி, பொது அமைதியை வலியுறுத்தி, இந்தியாவின் பல மாநிலங்களில், 1.09 லட்சம் கி.மீ., துாரம் சைக்கிள் மூலமாகவும், பாதயாத்திரையாகவும் சென்றுள்ளேன்.இதற்காக எனக்கு உலக சாதனை விருதும் கிடைத்தது. தற்போது, நிலவின் தென் துருவத்தில், சந்திரயான் - 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய விஞ்ஞானிகளுக்கு, பாராட்டு தெரிவிக்க, திருச்சியில் இருந்து, 500 கி.மீ., துாரத்தில், 26 நாட்களில் வருவதற்கு திட்டமிட்டேன்.அப்துல் கலாம் பிறந்த தினமான அக்., 15ல் பெங்களூரு நகரின் மையப்பகுதிக்கு வருகிறேன். 16ல் இஸ்ரோ தலைமையகத்தில் பாதயாத்திரையை முடிக்க உள்ளேன். பாரத தேசத்துக்கு பெருமை சேர்த்த விஞ்ஞானிகளை பாராட்டி, மகிழ்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
