அரசுப் பள்ளி வளாகங்களில் தளம் அமைக்காமல் மாணவர்கள் பாதிப்பு
அரசுப் பள்ளி வளாகங்களில் தளம் அமைக்காமல் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 09:42 AM
திருவாடானை:
திருவாடானை தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளி வளாகங்களில் தளம் அமைக்காததால் மழைக்காலங்களில் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.இந்த தாலுகாவில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களிலும் மண் தரையாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. தண்ணீர் வளாகத்தை விட்டு வெளியேறாமல் தேங்கி விடுகிறது.இதில் மாணவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அவர்களின் சீருடை சேறாகிறது. எவ்வளவு கவனமாக சென்றாலும் மாணவர்கள் வழுக்கி விழுந்து விடுகின்றனர். ஆசிரியர்களுக்கும் இதே நிலைதான். ஈரத்துடன் வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கல்வி கற்கும் சூழல் மாறுபடுகிறது.மைதானத்தில் தேங்கும் தண்ணீரால் வகுப்பில் இருக்கும் மாணவர்கள் பகலில் கொசுக் கடிக்கு ஆளாவதோடு மலேரியா, டெங்கு காய்ச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு கல்விக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பள்ளிகள் அமைந்திருக்க வேண்டும்.ஆனால் தேங்கியுள்ள மழை நீரால் அவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையில் திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில் மழை நீர் தேங்கியதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அரசு பள்ளிகளின் வளாகத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
