UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 10:17 AM
திருப்போரூர்:
பள்ளி மாணவ - மாணவியரிடம் பாரம்பரிய கலைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் கலை படைப்புத் திறனை வெளிப்படுத்த, பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஆண்டு முதல் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.இவ்விழா, திருக்கழுக்குன்றம் வட்டார பள்ளிகளில், நேற்று துவக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடுநிலை வகுப்புகளுக்கான போட்டிகளை, திருப்போரூர் வி.சி., எம்.எல்.ஏ., பாலாஜி துவக்கி வைத்தார்.உயர்நிலை வகுப்புகளுக்கு, மாமல்லபுரம் மற்றும் குழிப்பாந்தண்டலம் பள்ளிகளிலும், மேல்நிலை வகுப்புகளுக்கு, புதுப்பட்டினம் மற்றும் சதுரங்கப்பட்டினம் பள்ளிகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.இப்போட்டிகள், வரும் 21ம் தேதி வரை நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்றவர்கள், மாவட்ட அளவில் பங்கேற்பர். மாவட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர்.சித்தாமூர் ஒன்றியத்தில், தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை சார்பில், பள்ளி அளவிலான கலைத் திருவிழா, கடந்த வாரம் நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற மாணவர்கள் பங்கேற்ற வட்டார அளவிலான கலைத் திருவிழா, நேற்று பொலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 41 பள்ளிகளை சேர்ந்த, 520 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.நடனம், பேச்சு, கவிதை, வரலாற்று நாடகம், கட்டுரை, ஓவியம், தனிநபர் நடிப்பு, பல குரல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதேபோல், அச்சிறுபாக்கம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த கலைத்திருவிழாவில், 37 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டிகளில் பங்கேற்றனர்.- நமது நிருபர்கள் -
