UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 04:52 PM
புதுச்சேரி:
வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து, 4 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசினார்.புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில், உயர்கல்வித்துறை சார்பில், நடந்த திறன் மேம்பாட்டு பயிலரங்க துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
புதுச்சேரி அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு மிகச்சிறந்த கல்வியை வழங்கி வருகிறது.ஆனால் நம் மாணவர்களிடம் தகவல் தொழில்நுட்பம், மொழி அறிவு மற்றும் விரைந்து முடிவெடுக்கும் திறன் சற்று குறைவாக இருப்பதாக, வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான பயிற்சியை வழங்க கல்வித்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.தற்போது, நாஸ்காம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து, 4 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 1000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதோடு, வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொள்வதற்கான பயிற்சியும் வழங்கப்படும். வெளி இடங்களிலும், வெளிநாடுகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நிறைய படித்திருந்தாலும், திறன் இருந்தால்தான், வேகமாக முன்னேற இயலும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.
