UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 09:53 PM
கடந்த, 2010 - 11ம் ஆண்டில், அண்ணா பல்கலை உறுப்பு கல்லுாரிகளில், ஒப்பந்த அடிப்படையில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்கிடையில், புதிதாக தற்காலிக ஆசிரியர்கள் தேர்வுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, தங்களை நிரந்தரம் செய்யவும், புதிய அறிவிப்பை எதிர்த்தும், தற்காலிக உதவி பேராசிரியர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தற்காலிக அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு, எப்படி, வெயிட்டேஜ் வழங்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கவும், காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களில் தேர்வு செய்வதற்கான வரைவு அறிவிப்பாணையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதையடுத்து, இவ்வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வரைவு அறிவிப்பாணையை பரிசீலித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புகழ்பெற்ற அண்ணா பல்கலையில் படித்து தேர்ச்சி பெற்ற பொறியாளர்கள் பலர், தொழில்நுட்ப துறையில் உச்சத்தை அடைந்துள்ளனர். இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும், அண்ணா பல்கலையின் திறனுக்கு சான்று உள்ளது.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், அண்ணா பல்கலையில் படித்தவர் தான். இவ்வளவு பெரிய பல்கலையும், அதன் உறுப்பு கல்லுாரிகளும், குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்களை வைத்து இயங்குவதை ஏற்க முடியவில்லை.எனவே, உடனடியாக ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க வேண்டும். தற்போது காலியாக உள்ள, 232 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடவடிக்கையை துவங்க அண்ணா பல்கலையை அனுமதிக்கலாம்.உறுப்பு கல்லுாரிகளில் பணிபுரியும், 372 ஆசிரியர்கள் உள்பட தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்று, அறிவிப்பாணையை அண்ணா பல்கலை வெளியிட வேண்டும். எழுத்து தேர்வில் சலுகை, நேர்முக தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் என தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். இதை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.மூன்று மாதங்களில் தேர்வு நடவடிக்கையை முடித்து, சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும்; நீதிமன்ற உத்தரவு இன்றி, இறுதி பட்டியலை வெளியிட கூடாது. தேர்வு நடவடிக்கைகள் முடியும் வரை, தற்காலிக ஆசிரியர்கள் பணியில் தொடரலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை, 2024 ஜனவரி முதல் வாரத்துக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
