மூணாறில் நிரந்தர கட்டடம் இன்றி கல்லுாரியை தவிர்க்கும் மாணவர்கள்
மூணாறில் நிரந்தர கட்டடம் இன்றி கல்லுாரியை தவிர்க்கும் மாணவர்கள்
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 10:29 AM
மூணாறு:
மூணாறில் அரசு கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு நகரில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் அரசு கல்லூரி செயல்பட்டு வந்தது. அங்கு 2018 ஆக. 15,16 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் கல்லூரி கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. அங்கு மீண்டும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாக புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. அதனால் தற்காலிகமாக பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு எவ்வித வசதிகளும் இன்றி கல்லூரி செயல்பட்டதால் மாணவர் சேர்க்கை குறைய துவங்கியது. அதன் பிறகு ஆயுத படை போலீஸ் முகாமிற்கு அருகில் உள்ள மாவட்ட சுற்றுலா துறைக்குச் சொந்தமான பட்ஜெட் ஓட்டல் கட்டடத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாற்றப்பட்டது. அங்கும் அடிப்படை வசதிகள் இன்றி இடப்பற்றாக்குறை நிலவுகிறது.ஆரம்பத்தில் கல்லூரியில் 606 மாணவ, மாணவியர்கள் பயின்று வந்த நிலையில் நிரந்தர கட்டடம் இன்றி தற்போது 220 பேர் படிக்கின்றனர். இந்தாண்டு 80 பேர் மட்டும் சேர்ந்தனர். நிரந்தர கட்டடம், அடிப்படை வசதிகள் ஆகியவை இல்லாததால் கல்லூரியில் சேருவதை மாணவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
