UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 10:26 AM
காரைக்குடி:
கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி மேலமாகாணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி மாணவர்கள், பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 49 மாணவர்கள் 55 மாணவிகள் என 104 பேர் படிக்கின்றனர். ஆலங்குடி மட்டுமின்றி மேலமாகாணம் கருங்குடி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியை சித்ரா பள்ளி மாணவர்களை டீ வாங்க கடைக்கு அனுப்புவதாகவும் சீருடை அணியவில்லை என்றால் குப்பை சேகரிக்க விடுவதாகவும் மாணவர்கள் தண்ணீர் கேட்டால் அலட்சியமாக பதில் அளிப்பதாக புகார் எழுந்தது. மேலும் தலைமை ஆசிரியை தனது உறவினரை பாடம் எடுக்க வைத்ததாகவும் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். பெற்றோர்கள் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் கலைவாணி, பெற்றோர்களை சமாதானம் செய்ததோடு தலைமை ஆசிரியையை பணிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.
